மதுரையில் பாண்டியர்கள் ஆட்சியை மழுங்கடித்து சில காலங்கள் களப்பிரர்கள் ஆட்சிசெய்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம், இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. கலை, மொழி நாகரிகம், பண்பாடு, எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் ஆட்சி மற்றும் தமிழ் சங்கங்களின் அழிவு பாண்டியர்களின் எழுச்சியென அன்றைய சங்ககாலத்திற்கு முற்பட்ட மதுரையை படம் பிடித்துகாட்டுகிறது நித்திலவல்லி.
மதுராதிபதிவித்தகரின் அரசியல் சூழ்ச்சிகள், ஐந்தில் நான்கு களப்பிரர்களால் கொள்ளப்பட்ட பாண்டிய வம்சத்து இளவரசர்கள், எஞ்சிய ஒரே இளவரசன் இளையநம்பி, அவனை காதலிக்கும் செல்வபூங்கோதை, ரத்தினமாலை, தமிழ்சங்கமற்ற மதுரை என கண்முன்னே இழிவுற்ற பாண்டியநாடு விஸ்தரிக்கின்றது.
இளையநம்பியின் அரசியல் நோக்கமும் வீரமும், அதனை காட்டியும் சகுனியை விட நுட்பமான மதித்திறன் கொண்ட மதுராதிபதி வித்தகரின் அரசியலும் பாண்டிய மகுடத்தின் வைரங்கள்
பாண்டிய கொடியேற்றமும் செல்வபூங்கோதையின் தியாகமும், அரசியல் திருமணங்களும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் ரத்தினமாலையே நெஞ்சில் நிலைத்து நிற்கிறாள். பெரும்பாலும் வீரமும் முற்போக்கு சிந்தனையும் கலந்த பெண்களை ஒதுக்கி பத்தாம்பசலிகளையே நோக்கி செல்லும் ஆண்மனங்களை பற்றிய தெளிவான ஆய்வையே செய்துள்ளார் நா. பார்த்தசாரதி.
---------
நித்திலவல்லி - சரித்திர நாவல் - நா. பார்த்தசாரதி
Author(s): நா.பார்த்தசாரதி
Edition: 5
Publisher: தமிழ்ப் புத்தகாலயம்
Year: 2002
Language: Tamil
Pages: 502
City: Chennai
Tags: தமிழ், Tamil, நாவல், Novel